Wednesday 5 November 2014

உணவுப்பொருட்களில் கலப்படம்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.

                          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 பணத்தாசை காரணமாக சிறிதும் மனசாட்சி இன்றி மனித உயிர்களோடு விளையாடுகிறார்கள்.
  இந்த பதிவில் உணவுப்பொருட்களில் கலப்படம் பற்றி காண்போம்.
 (1) பால்;
        பாலில் தண்ணீர்,மசித்த உருளைக்கிழங்கு போன்ற மாவுப்பொருட்கள்,யூரியா உரம்,சோப்பு பவுடர்,காஸ்டிக் சோடா,ரீபைண்டு ஆயில்,பார்லி கஞ்சி,மைதா மாவு,பாமாயில் என பல்வேறு வகையான உடல்நலத்திற்கு கேடான பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பால் அடர்த்தி காட்டப்படுகிறது.கெடாமல் இருக்க பயன்படுகிறது.நுரை வரும்,விற்பனையாளருக்கு வருமானத்தை பெருக்குகிறது.
(2)எண்ணெய் வகைகள்;
      தேங்காய் எண்ணெய்; இதில் பெட்ரோலியக்கழிவான மினரல் எண்ணெய் எனப்படும் கனிம ஆயில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கு ஒன்பது லிட்டர் வேக்ஸ் ஆயில் என்ற விகிதத்தில் கலப்படம் செய்யப்படுகிறது.மினரல் ஆயில் ஒரு லிட்டரின் விலை பதினைந்து ரூபாய் மட்டுமே...இந்த மினரல் ஆயில் நிறமோ மணமோ இல்லாதது..பிசுபிசுப்புத்தன்மை கொண்டது.எல்லா வகை எண்ணெய்களிலும் எளிதாக கலந்துவிடலாம்.கண்டுபிடிப்பது கடினம்...
உணவு எண்ணெய்கள்; இவற்றில் கனிம எண்ணெய்,ஆர்ஜிமோன் எண்ணெய்,பருத்திக்கொட்டை எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,முந்திரி எண்ணெய் என பலவகை எண்ணெய்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.
நெய்; இதில் மாட்டுக்கொழுப்பு,மிருகங்களின் கொழுப்பு,வனஸ்பதி,பனை எண்ணெய்,மெழுகு,வேதிப்பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,பாமாயில்,சணல் எண்ணெய், இவைகளை கலப்படம் செய்கிறார்கள்.இத்துடன் ஜெர்மனியில் கிடைக்கும் ஒருவித எசன்ஸ் இதன் விலை ஒரு லிட்டர் நான்காயிரம் ரூபாய் மட்டும்.இதில் ஒரு துளி விட்டால்போதும்.ஒரிஜினல் நெய்ய்யை விட வாசனை தூக்கலாக இருக்கும்.இதனை போலியான அக்மார்க் தரச்சான்று முத்திரையுடன் வடநாட்டு பிரல நெய் விற்பனை நிறுவனங்களின் முகவரியில் விற்பனை செய்யபடுகின்றன.
 குளிர்பானங்கள்; பழரசங்கள்,காற்றடைக்கப்பட்ட பானங்கள்;
          இவைகள் கெட்டுப்போகாமல் இருக்கவும்,நரம்புத்தூண்டலை ஏற்படுத்தவும்,மனதை கவரும் வண்ணத்திற்கும்,சுவைக்காகவும்,செயற்கை இனிப்பூட்டிகள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,அனுமதியில்லாத வண்ணங்கள்,மற்றும் சில வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.

  மினரல் ஆயில் என்னும் கனிம எண்ணெய்;-
                                        இந்த எண்ணெய் பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கும் 24வகையான பொருட்களுக்குப்பின்னர் கழிவாக கிடைக்கும் எண்ணெய் ஆகும்.மணமில்லாதது.நிறமில்லாதது.பிசுபிசுப்புத்தன்மையுடையது.அனைத்து வகையான உணவு எண்ணெய்கள்,பிரபல கம்பெனித்தயாரிப்பான தேங்காய் எண்ணெய் முதல் ஹெர்பல் என்னும் இமாலய கம்பெனிகள் வரை,குழ்ந்தைகளுக்கான ஜான்சன் பேபி ஆயில் முதல் பிரபலமான சோப்பு வகைகள் வரை என அனைத்திலும்  வஞ்சகமின்றி கலப்படம் செய்யப்படுகிறது.
(3) அரிசி; இதில் கல்,மண்கட்டிகள், பாலீஸ் செய்யப்பட்டு சன்ன ரகமாக்கப்பட்ட தரம் குறைந்த அரிசி ,போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.
(4)துவரம் பருப்பு; இதில் விலை குறைந்த கேசரிப்பருப்பு மற்றும் மெட்டானில் என்ற ரசாயனவண்ணம் சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது.
(5)மஞ்சள் தூள்;
                    இதில் லீட் குரோமைட் என்னும் நிறம் கலப்படம் செய்யப்படுகிறது.
(6)கொத்துமல்லித்தூள் அதாவது தனியாப்பொடி; இதில் மரத்தூள்,மிருகங்களின் சாணப்பொடி,மாவு,கலப்படம் செய்யப்படுகிறது.
(7)மசாலாத்தூள்; மரத்தூள்,சாணப்பொடி,செங்கல் பொடி,நிறமேற்றிய சாம்பல் கலப்படம் செய்யப்படுகிறது.
(8)மிளகாய் வற்றல்; சல்ல சிவப்பான நிறமுடைய மிளகாய் வற்றலே தரமானது என்று நம்பியிருக்கும் மக்களின் கருத்தினை அறிந்துகொண்ட வணிகர்களில் சிலர் லாப நோக்கில் பிஞ்சு மிளகாய் மற்றும் கலர் தரம்குறைந்த மிளகாய்களை குறைந்த விலைக்கு வாங்கி அத்துடன் சிவப்பு நிறமேற்றுவதற்காக  ''சூடான் ரெட்'' என்னும் வேதிப்பொருளையும் கலந்து குடோனில் அடைத்து வைப்பதால் மிளகாய் வற்றல் அனைத்தும் நல்ல ரத்த சிவப்பாக மாறிவிடுகிறது.இவ்வாறு கலர் கிடைப்பதால் சந்தையில் கொள்ளை இலாபத்திற்கு விற்கிறார்கள்.
(9)டீத்தூள் ; பயன்படுத்திய தூள்,மரத்தூள்,உளுந்து முந்திரி நிலக்கடலை போன்றவற்றின் தோலை பொடி செய்த தூள்,புளியங்கொட்டைப்பொடி,இத்துடன் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமேற்றி கலப்படம் செய்து விற்கிறார்கள்.
(10)காபித்தூள்; சிக்கரித்தூள்,புளியங்கொட்டைத்தூள்,பேரீச்சங்கொட்டைத்தூள் இவற்றை கலக்கிறார்கள்.
(11)மிளகு ; இதில் உலர்ந்த பப்பாளிவிதையை கலப்படம் செய்கிறார்கள்.
(12)கடுகு; இதில் ஆர்ஜிமோன் விதை,சிறு கல்  கலப்படம் செய்கிறார்கள்,
(13)சீரகம்; இதில் நிலக்கரித்தூள் கலந்த புல்விதையை கலப்படம் செய்கிறார்கள்.
(14)பாக்குத்தூள்; இதில் மரத்தூள் கலப்படம் செய்கிறார்கள்.
(15)கிராம்பு;இதை எண்ணெய் எடுத்து விற்கிறார்கள்.
(16)ஏலக்காய்; இதை எண்ணெய் எடுத்து பிறகு முகப்பவுடர் கலப்படம் செய்கிறார்கள்.
(17)பச்சைப்பட்டாணி ; இதில் பச்சை கலர் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள்.
(18) ரவை; இதில் இரும்புத்தூள்,மாவு வகைகள்,தவிடு போன்றவற்றை கலப்படம் செய்கிறார்கள்.
(19)ஜவ்வரிசி;இதில்  மணல்,முகப்பவுடர் கலப்படம் செய்கிறார்கள்.
(20)குங்குமப்பூ; இதில் உலர்ந்த சோளத்தட்டுடன் நிறம் மற்றும் மணம் ஏற்றி கலப்படம் செய்கிறார்கள்.
(21)பெருங்காயம்; இதில் மரப்பிசின்,மண் போன்றவை கலப்படம் செய்கிறார்கள்.
(22)கம்பு; இதில் ஒருவித பூஞ்சை , அதே அளவு கற்கள் கலப்படம் செய்கிறார்கள்.
(23)ராகி; இதில் மண்,சிறு கற்கள் கலப்படம் செய்கிறார்கள்.
(24)உப்பு; இதில் சுண்ணாம்புத்தூள்,வெள்ளைக்கல் பொடி கலப்படம் செய்கிறார்கள்.
(25)அஸ்கா சர்க்கரை; இதில் ரவை,எலும்புத்தூள்,சுண்ணாம்புத்தூள் கலப்படம் செய்கிறார்கள்.
(26)நாட்டுச்சர்க்கரை மற்றும் கட்டிவெல்லம்; இவற்றில் சுண்ணாம்பு,மண்,சோடா உப்பு,யூரியா உரம்,அமோனியா கலப்படம் செய்கிறார்கள்.
(27)தேன்; இதில் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்கிறார்கள்.
(28)புளி; இதில் மண்,தண்ணீர்,புளியங்கொட்டை,நார்,புளியந்தோல் கலப்படம் செய்கிறார்கள்.
(29)மைதா ; இதில் மரவள்ளிக்கிழங்குமாவு,கலப்படம் செய்கிறார்கள்.
(30)பழவகைகள் பழுக்கவைக்க; 
            மா,வாழை,பப்பாளி போன்ற பழவகைகளை முதிர்ந்த பிறகு அறுவடை செய்து இயற்கைமுறையில் புகைமூட்டம் கொடுத்து பதமாக சூடுபடுத்தி இரண்டு  அல்லது மூன்று நாட்கள் காத்திருந்து பழுக்கவைப்பார்கள்.இதுவே பழங்கால ஆரோக்கியமான பழுக்கவைக்கும் முறையாகும்.ஆனால் அத்தனை நாட்கள் காத்திருக்க இன்றைய வியாபாரிகள் தயாராக இல்லை.பழங்களையும் முதிர்வடையும் முன்பே அறுவடை செய்துவிடுகிறார்கள்.அதனால் சீக்கிரமாக பழுக்கவைத்து கண் கவரும் நிறத்தை வரவழைத்து விற்று வருமானத்தை பார்க்கவேண்டும் என்பதால் இவற்றை பழுக்கவைக்க ''கார்பைடு''  என்னும் ரசாயன பொருளை பயன்படுத்தி வேதிப்பொருளால் பழுக்கவைக்கிறார்கள்.இந்த கார்பைடு வேதிப்பொருள் கடந்த காலத்தில் போபாலில் விஷவாயு ஏற்படுத்தி பெரும் ஆபத்தை ஏற்படுத்திய பொருள் என்பதை மனதில் வையுங்கள்.
(31)ஆப்பிள்; இது நமது கண்களுக்கு அழகான தோற்றத்தை கொடுப்பதற்காக மெழுகு என்னும் ரசாயனப்பொருளை மேல் பூச்சு செய்து விற்கிறார்கள்.
(32)மிட்டாய் போன்ற இனிப்புகள்; இவற்றில் அனுமதியில்லாத வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன.ரசாயன சுவைகள் சேர்க்கப்படுகின்றன.
(33) பிஸ்கட் ;இவற்றில் தவிடு போன்ற கழிவுகள் கலப்படம் செய்யப்படுகின்றன.
(34)சாலையோர உணவகங்கள்; இவற்றில் சாலையோர மாசு கலப்படம் ஆகின்றன.அதாவது தெருவோர தூசிகள்,மண்புழுதி,வாகனப்புகை போன்ற மாசு நிறைந்த காற்று கலப்படம் ஆகிறது.உணவு,குடிநீர்,பாத்திரம் இவை சுகாதாரமாக இருப்பதில்லை.தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகள் சேர்கின்றன.பழைய உணவுகளை கலப்படம் செய்கிறார்கள்.சுவைக்காகவும்,மணத்திற்காகவும்.நிறத்திற்காகவும் தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்களை கலப்படம் செய்கிறார்கள். உணவு எண்ணெய் வகைகளை குறைந்த விலையில் கலப்படத்தை வாங்கி அதையே சிக்கனம் கருதி மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள்.இதனால் ''டிரான்ஸ்'' என்னும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு உற்பத்தியாகின்றது.இது இரத்தகுழாய்களை அடைத்து மாரடைப்பு போன்ற நோய்களை தருவிக்கிறது.
 இறைச்சிகளை சீக்கிரமாக  வேகவைக்க பாராசிட்டாமால் மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.மென்மைத்தன்மையாக்க தடைசெய்யப்பட்ட ரசாயனப்பொருட்களை கலப்படம் செய்கிறார்கள்.
கலப்படத்தால் மனிதர்களுக்கு நேரிடும் ஆபத்தை அடுத்த பதிவில் காண்போம். 
         என அன்பன்.

 

No comments:

Post a Comment