Wednesday 9 September 2015

சுதந்திர தினவிழா-2015


மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம் தாளவாடியிலுள்ள KCT மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 69 வது சுதந்திர தினவிழாவிற்கு 2015ஆகஸ்டு 15 ந் தேதி அன்று  முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சுதந்திரக்கொடி ஏற்றி நிகழ்த்திய சுதந்திர தின விழா  சிறப்புரை . 


                   
           
   மரியாதைக்குரிய அவை சார்ந்த சான்றோர் மேன்மக்களே அனைவருக்கும் நான் சார்ந்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சார்பாக முதற்கண் வணக்கம்.சுதந்திரம் பெற்று அறுபத்தெட்டு ஆண்டுகள் நிறைவடைந்து அறுபத்தொன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய வேளையில் ,

                  சினிமா நடிகர்களையும்,கிரிக்கெட் வீரர்களையும் கதாநாயகர்களாக கொண்டாடி வரும் நாம் நமது சந்தோசமான வாழ்வுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த விடுதலை வீரர்களை நினைவுபடுத்தி போற்றவேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதற்காக

         நமது இந்தியா அடிமைப்பட்டதும்,சுதந்திரம் பெற கொடுமைப்பட்டதும் பற்றி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது சிறப்பானதாக நான் கருதுகிறேன்.

       நமது இந்திய நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே  சிறந்த நாகரீகம் கொண்ட செழிப்பான நாடு ஆகும்.ஆனால்  5300ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்துதான்  நமது இந்திய வரலாறு பற்றிய அறிய முடிகிறது.
  
         நமது வளமிக்க நாட்டில்  கி.பி.712 ஆம் ஆண்டு முகம்மது பின் காசிம் என்னும் அரபு நாட்டின் அரசன் பஞ்சாப் மாநிலத்தின் சில இடங்களைப்பிடித்து இந்தியாவில் முகலாய அரசை தொடங்கினான்.

        நம் நாட்டில் ஏராளமாக விளையும் மசாலா உணவுப்பொருட்களான மிளகு,ஏலக்காய்,பட்டை,கிராம்பு போன்ற நறுமணப்பொருட்களையும்,பருத்தி,பட்டு போன்ற  ஆடைகளையும் நவரத்னக்கற்களையும் நமது வணிகர்கள் ஆசியாவின் வர்த்தக மையமான மலேசியாவிற்கு கொண்டு சென்று.அங்கு  

         மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வரும்  அரேபியர்களிடம் பண்டமாற்று முறையில் நமது பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக பேரீச்சை,அரேபியக்குதிரை,கலை நயமிக்க தரைவிரிப்புகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

         அவ்வாறு  நமது வணிகர்களிடம் பெற்ற பொருட்களை அரேபியர்கள் ஒட்டகத்தில் ஏற்றிச்சென்று தரைவழியாக  இத்தாலியிலுள்ள ஐரோப்பிய வர்த்தக மையமான வெனிஷ் நகரில்  ஐரோப்பிய வணிகர்களுக்கு கொடுத்துவிட்டு அவைகளுக்கு ஈடாக பெருமளவு தங்கத்தை பெற்றுக்கொண்டு இருந்தார்கள். 

               ஐரோப்பிய நாடுகள் குளிர்ப்பிரதேசம் ஆகையால் மாமிசங்களை பதப்படுத்தவும்,உணவுக்கு சுவை கூட்டவும் மசாலாப்பொருட்களான மிளகு,ஏலக்காய்,கிராம்பு பொன்ற பல சரக்குப்பொருட்களுக்கு ஐரோப்பிய நாட்டில் ஏகப்பட்ட கிராக்கி இருந்தது.

      இந்தியாவில் விளையும் பொருட்கள் பற்றி தெரிந்துகொண்ட ஐரோப்பியர்களுக்கு இந்தியா எங்கு உள்ளது என்று தெரியாது ஆதலால் கடல் வழி மார்க்கமாக  இந்தியாவை கண்டுபிடித்துவிட்டால் இடைத்தரகர்களான அரேபியர்களுக்கு ஏகப்பட்ட தங்கத்தை கொடுத்து இழக்க வேண்டியதில்லை.யாருடைய தயவும் இன்றி நேரடியாககடல் வழிப்பயணத்தில்  நமது நாட்டிற்கு வாங்கி வரலாம்  என நினைத்து கடல்வழியாக இந்தியாவுக்கு பாதை கண்டுபிடிக்க தயாரானார்கள்.

              பெரிய ஐரோப்பிய வணிகரும் சிறந்த மாலுமியுமான கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள் இதற்காக ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடினார்.இங்கிலாந்தும் போர்ச்சுக்கல் அரசும் மறுத்துவிடவே கடைசியாக ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா ராணி அவர்கள் முழு உதவியும் கொடுத்ததுடன் கொண்டு வரும் பொருட்களில் பத்தில் ஒரு பங்கு கொலம்பஸூக்கே தருவதாகவும் உறுதியளித்தார். 

             இதனால்.கி.பி.1492ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 ந் தேதி  கொலம்பஸ் தன் 41 வது வயதில் நூறு பணியாளர்களுடன் சாண்டாமரியா,நின்யா,பின்டா ஆகிய மூன்று கப்பல்களில்  கடல் வழியில் இந்தியாவை கண்டுபிடிக்க புறப்பட்டார்.இரண்டு மாதங்கள் கடலில் அலைந்து திரிந்து கி.பி.1492 அக்டோபர் 12 ந் தேதி வட அமெரிக்காவில் உள்ள பகாமஸ் தீவை கண்டுபிடித்தார்.

           இந்தியாவை கண்டுபிடிப்பதே இலட்சியமாக கொண்ட கொலம்பஸ் மேலும் கடல் பயணத்தை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளை கண்டு பிடித்தார். அதையே இந்தியா என்றும் தவறாக எண்ணினார்.

        இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டு இரண்டாம் ஜான் என்னும் மன்னர்  நாடு காண் பணி ஏற்று இந்தியாவை கண்டுபிடிக்க எசுகிடேவோடா காமா க்கு உத்தரவு இட்டார்.ஆனால் எசுகிடேவோ டா காமா இந்தியாவை கண்டுபிடிக்க முடியாமல் இறந்துவிட்டார் அதனால் அவரது மகன் வாஸ்கோடகாமா வுக்கு இந்தியா கண்டுபிடிக்கும் பணியை தொடங்குமாறு அரசர் உத்தரவிட்டார்.வாஸ்கோடகாமா வும் அவரது சகோதரர்களும் தாலமி என்ற கணிதவியலாரின் கொள்கைப்படி  டிகிரி என்னும் கோண அளவீடுகளை பயன்படுத்தி   வரைபடம் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்கள்.அதன் அனுபவத்தை வைத்து இந்தியா பயணத்திற்கான கடல்வழிப்பாதையை கண்டறியும் பணியில் இறங்கினார். 

                   கி.பி.1498 ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள கோழிக்கோடு பகுதியில் இறங்கினார். கோழிக்கோடு பகுதியை ஆண்டு வந்த மன்னர் சாமரின் அவர்கள் வாஸ்கோடகாமா விற்கு வரவேற்பு அளித்து தங்குவதற்கு சலுகையும் கொடுத்தார்.

             கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கி இருந்த வாஸ்கோடகாமா  இந்தியாவில் விளையும் கறி மசாலா பொருட்களான மிளகு,ஏலக்காய்,சீரகம்,பட்டை,கிராம்பு போன்ற உணவுப்பொருட்களையும்,விலை உயர்ந்த நவரத்தின கற்களையும் மூட்டை கட்டிக்கொண்டு சென்றார்.

            ஐரோப்பாவின் வர்த்தக மையமான இத்தாலி -வெனிஷ் நகரில் வணிகம் செய்தார்.அப்போது இந்திய மசாலாப்பொருட்களால் கவரப்பட்ட ஐரோப்பிய வணிகர்கள் சிலர் வாஸ்கோடகாமாவுடன் இந்திய வருகை புரிந்தார்கள்.அப்போது கேரளா கண்ணனூரில் வந்து இறங்கினார்கள். மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு பயணித்த வாஸ்கோடகாமா கொச்சியில் வந்து இறங்கினார். நோய்வாய் பட்ட வாஸ்கோடகாமா கொச்சியிலேயே இறந்துவிட்டார்.
  
                இங்கிலாந்தும் இந்தியாவின் வளத்தை பற்றி தெரிந்துகொள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உறுப்பினரும்,பல துறைகளில் அரசுஅதிகாரியாக பணியாற்றியவருமான லார்டு மெக்கலே பிரபு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பியது.லார்டு மெக்கலே பிரபு  நான்காண்டுகள் இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு

             கி.பி.1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ந் தேதி நடைபெற்ற இங்கிலாந்து பாராளுமன்றக்கூட்டத்தில் லார்டு மெக்கலே பிரபு தன் உரையில்,

                  '' நான் இந்தியாவின் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து விட்டேன். ஒரு இடத்தில் கூட பிச்சைகாரர்களோ,திருடர்களோ ஒருவரைக்கூட காண முடியவில்லை. இந்திய மக்கள் நல்ல குணங்களை கொண்டவர்கள்.சிறந்த பண்பாடு உள்ளவர்கள்.ஆன்மீகத்தில் அதிகப்பற்று உடையவர்கள்.எதையும் எளிதில் நம்பும் மனம் உள்ளவர்கள்.நாம் இந்தியாவை அடிமைப்படுத்த வேண்டுமானால் முதலில் இந்தியர்களின் கலாச்சாரத்தையும்,ஆன்மிகத்தையும் உடைத்தெறிய வேண்டும்.நாம்தான் உயர்ந்தவர்கள் என்று இந்தியர்களை  நம்புமாறு செய்ய வேண்டும்.அப்போதுதான் இந்தியா அடிமையாகும். என்றார்.
   
                பிறகு ஆங்கிலேய அரசு இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை வணிகம் செய்வதற்காக என்று  இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.இந்திய மன்னர்களுக்கு வரிகொடுத்து இடம் பிடித்து வணிகம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனி மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரத்திலும் தலையிட்டு நமக்குள் இருந்து இன வேற்றுமை,பகையுணர்வு,ஒற்றுமையின்மை,பழிவாங்கும் எண்ணம் போன்ற பலவீனங்களை அறிந்துகொண்டு நம்மை அடிமைப்படுத்திக்கொண்டது.

             இங்கிலாந்து ராணுவ உதவியுடன் கிழக்கிந்திய கம்பெனி நமது இந்தியாவை ஆண்டு வந்தது.அப்போது அடித்து துன்புறுத்தி கடுமையாக வேலை வாங்கினர்,ஓய்வு என்பதே இல்லாமல் தொடர்ந்து வேலை வாங்கினர்.மிகவும் கீழ்த்தரமாக நடத்தினர்.அனைத்து உரிமைகளும் பறித்துக்கொண்டு ஆடுமாடுகளைப்போல நடத்தினர்.

              கி.பி. 1850ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேய ICS அதிகாரி உத்தரப்பிரதேசத்திற்கு இந்திய நிர்வாகப்பணி தொடங்க வந்தார்.மற்ற ஆங்கிலேய அதிகாரிகளைப்போல இல்லாமல் இந்திய மக்கள் முன்னேற்றத்திற்கு உண்மையிலேயே உழைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியேற்ற அவர்,இந்திய மக்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இலவச தொடக்கப்பள்ளிகளை நிறுவினார்.ஆங்கிலப்பள்ளி ஒன்றை தம் சொந்த செலவில் நடத்தினார்.
     
    கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவப்படை  அதிகாரிகள் நமது இந்திய சிப்பாய்களை கொடுமைப்படுத்தினர்.துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்களுக்கு முஸ்லீம் வெறுக்கும் பன்றி கொழுப்பையும்,இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் கொழுப்பையும் தடவி உறையிட்டுக்கொடுத்தனர்.துப்பாக்கி பயன்படுத்தும்போது தொட்டாக்களின் உறையை வாயில் கடித்து எடுத்து பயன்படுத்த வேண்டும்.இதனால் வெறுப்படைந்த ''மங்கள் பாண்டே'' என்ற இந்திய சிப்பாய் மற்ற சிப்பாய்களை ஒன்று திரட்டி  ராணுவ அதிகாரிகளையே தாக்கினார்.இவ்வாறு நடத்திய சிப்பாய்கள் கலகத்தால்  பதறிப்போன கிழக்கிந்திய கம்பெனி இங்கிலாந்து ராணுவத்தை உதவிக்கு அழைத்தது. 

                   உடனே இயந்திர ஆயுதங்களுடன் வருகை புரிந்த பிரிட்டிஷ் ராணுவம்  இந்திய சிப்பாய்களை அடக்கி மங்கள் பாண்டே என்ற சிப்பாயை தூக்கிலிட்டது.அதன் பின்னர் பிரிட்டிஷ் அரசு கம்பெனி ஆட்சியிலிருந்து தம் நேரடி ஆட்சிக்கு உட்படுத்தியது.

                ஆங்கிலேய மேலதிகாரிகள் இந்தியர்களுக்கு கல்வி கொடுக்கக்கூடாது என்று  கி.பி.1959ம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பி இந்திய மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு உத்தரவிட்டனர்.இந்த உத்தவை மறுத்த,

               ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ICS ஆங்கிலேய அதிகாரி அவர்கள், மக்களுக்கு கல்வி அறிவுதான் மிக முக்கியம். இந்திய மக்கள் கல்வி பெற்றால் நமது அரசாங்கத்தின் மேல் நல்ல நம்பிக்கை ஏற்படும்.இதனால் பிரிட்டிஷ் அரசுக்கு நன்மையாகும்.என்று கூறி 

             கி.பி.1859ஆம் ஆண்டு மார்ச் 30 ந் தேதியிட்ட கடித்தத்தின்படி இந்திய மாணவர்களுக்கு கல்வி  கொடுப்பதை பரவலாக்கி அதிகரித்தார்.இதனால் ஆங்கிலேய மேலதிகாரிகள் ஆலன் அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினர்.இதனால் வெறுப்படைந்த ஆலன் ஹியூம் அவர்கள்  கி.பி.1882ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று தனது அரசுப்பதவியை விட்டு விலகினார்.

               ஆங்கிலேய அரசு அதிகாரிகள் இந்திய மக்களுக்கு செய்யும் கொடுமைகளை கண்டு வேதனைப்பட்ட  ஹியூம் அவர்கள் இந்திய மக்கள் சில உரிமைகளைப் பெறுவதற்காக 

         கி.பி.1885ஆம் ஆண்டுடிசம்பர் 28 ந்தேதி மும்பையிலுள்ள கோவாலியா குளக்கரையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தி இந்திய  தேசிய காங்கிரஸ் என்ற இயக்கம் துவங்க காரணமாக இருந்தார்.

          அப்போது காங்கிரஸ் இயக்கத்தின் நோக்கம்-
           முழு சுதந்திம் பெறுவதை நோக்கமாக இல்லாமல்,சில சலுகைகளையும்,உரிமைகளையும் கேட்டுப் பெறுவதாக மட்டுமே இருந்தது.
  
               கி.பி.1914 முதல் கி.பி.1918வரை முதல் உலகப்போர் மூண்டது.மைய நாடுகளுக்கும்,நேச நாடுகளுக்கும் இடையே ஐரோப்பிய நாடுகளில் போர் நடைபெற்றது.இப்போரில் முதன்முதலாக இயந்திர ஆயுதங்களும்,நீர் மூழ்கி கப்பல்களும், மோட்டார் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.பல இலட்சக்கணக்கான வீரர்கள் போரில் இறந்தும்,கொடுங்காயம் அடைந்தும்,ஊனமுற்றும் அவதிப்பட்டனர்.

              பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய சிப்பாய்கள் திறமையாக போரிட்டு பிரிட்டிஷ் அரசு வெற்றிபெற காரணமானார்கள்.

         முதல் உலகப்போரில் ஏற்பட்ட அழிவினை கண்டு உலக நாடுகள் ஒன்று சேர்ந்து அமைதிக்காக
 கி.பி.1920 இல் ''உலக நாடுகள் சங்கம்'' LEAGUE OF NATIONS அமைப்பை ஏற்படுத்தினார்கள்.ஆனால் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் கி.பி.1930இல் உலக நாடுகள் சங்கம்  முடங்கிப்போனது.

   முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தமைக்காக இந்தியாவில்

            கி.பி.1919ஆம் ஆண்டு  இரட்டை ஆட்சி முறை கொண்டு வந்து சில சலுகைகளை பிரிட்டிஷ் அரசு  நமது மக்களுக்கு கொடுத்தது. ஆனால் காந்திடிகள் ஏற்க மறுத்து  போராடுவதற்காக ''ஒத்துழையாமை இயக்கத்தை'' உருவாக்கினார்.

               கி.பி.1922 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்து இளவரசர் வேல்ஸ் என்பவரை இந்தியாவை சுற்றிப்பார்க்க  அனுப்பி வைக்க முடிவு செய்து அன்றைய தினம் இளவரசருக்கு முழு மரியாதை செலுத்துமாறு உத்தரவு இட்டது.ஆனால்  விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் இளவரசர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்தனர்.

              நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில்  தொண்டர் படையை அமைத்து மறியல் செய்ய முடிவு செய்தார்.இதை அறிந்த பிரிட்டிஷ் அரசு நேதாஜியின் தொண்டர் படை சட்ட விரோதமானது என்று அறிவித்து அனைவரையும் கைது செய்தது.சில நாட்களில் நேருஜியும்,சித்தரஞ்சன்தாஸும் கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறைத்தண்டனைக்கு ஆளானார்கள்.

           விடுதலையானதும் சித்தரஞ்சன்தாஸ் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.எனவே வருகின்ற சட்டமன்றத்தேர்தல்களில் இந்தியர்கள் அதிக அளவில் போட்டியிடு அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர் இடங்களை கைப்பற்ற வேண்டும்.அதன்மூலமாக விடுதலைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என ஆலோசனை கொடுத்தார்.ஆனால் 

        காந்தியடிகளின் ஆதரவாளர்கள் இதை எதிர்த்தார்கள்.இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 

          சித்தரஞ்சன்தாஸ் அவர்கள் 'சுயாட்சி என்ற புதிய கட்சியை துவக்கி நேதாஜி ஆசிரியர் பொறுப்பேற்ற சுயராஜ்யா என்ற பத்திரிக்கையையும்  துவக்கினார்.

             கி.பி.1929 ஆம் ஆண்டு டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ்மாநாட்டில் ''பூரண சுயராஜ்யம்தான் நமது உடனடி இலட்சியம்''என்றும்  இந்த விடுதலைப்போராட்டத்தை காந்தியடிகள் எப்படி?எங்கு?எப்போது?நடத்துவது என முடிவு செய்து வழிநடத்துவார்  என முழு அதிகாரமும் காந்தியடிகளுக்கு கொடுக்கப்பட்டு இரு தீர்மானங்களை  மகாசபை தீர்மானங்களை நிறைவேற்றியது.

        இவ்வாறு இருக்க ஏற்கனவே பல்வேறு இடங்களில் வன்முறைகளும்,மறியலும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பஞ்சமும் தலைவிரித்தடியது.மக்கள் வறுமையில் சிக்கி சீரழிந்து வந்தனர். 

                    இந்த சூழ்நிலையில்முழு சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தை நடத்தும் பொறுப்பேற்ற காந்தியடிகள்  சட்ட மறுப்பு இயக்கம் போன்றவைகளைப்போல நடத்தினால் வன்முறை தீவிரமடைந்து நிலைமை மிக மோசமாகி மக்களுக்கு  தொல்லைகள் அதிகமாகும்.ஆதலால் 

           அகிம்சை வழியிலேயே முழு சுதந்திரத்திற்காக போராடலாம் என்று கருதி ஒரு வேண்டுகோள் விடுத்தார். அடுத்த மாதம் அதாவது 

           1930ஆம் ஆண்டு  ஜனவரி 26 ந் தேதி மக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே சுதந்திரம் கொண்டாட வேண்டும்,அப்போது நமது ''பொருளாதாரம்,அரசியல்,கலாச்சாரம்,ஆன்மிகம்'' ஆகிய நான்கு அம்சங்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும். என்ற உறுதிமொழியையும் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

            இதைக்கேள்விப்பட்ட பிரிட்டிஷ் அரசு  நமது தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வட்டமேசை மாநாடு நடத்தியது. கி.பி.1930நவம்பர் முதல் கி.பி.1930நவம்பர் வரை மூன்று முறை நடைபெற்ற வட்டமேசைமாநாட்டின் ஒப்பந்தப்படி இந்திய அரசு சட்டம் 1935 இயற்றப்பட்டது.இந்த சமயத்தில்

          கி.பி.1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டது.
  பர்மாவிலும்,மலேசியாவிலும் ஜப்பான் ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்களை சிறைபிடித்துவிட்டனர்.

            கி.பி.1942ஆம் ஆண்டு ராஷ் பிஹாரி போஸ் அவர்கள் ஜப்பான் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீரர்களை விடுதலை செய்து கொடுங்க.அவர்களை ஒன்றிணைத்து இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடுகிறோம்.அதேபோல உங்களுக்கும் உதவி செய்கிறோம் நீங்களும் இந்திய விடுதலைக்காக எங்களுக்கு உதவுங்க என பேசி தன் திறமையால் பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்களை விடுதலை செய்து இந்திய தேசியப்படை INDIA NATIONAL ARMY என்ற பெயரில் இந்திய  விடுதலை போராட்ட அமைப்பினை உருவாக்கினார்.போதிய ஆதரவு இல்லாமல் போகவே செயலிழந்து விட்டது.
      
             மீண்டும் கி.பி.1943ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசியப் படைக்கு INDIA NATIONAL ARMY புத்துயிர் கொடுத்து எழுச்சிபெறச் செய்தார். அப்போது ''ஜான்சிராணிப் படை'' என்ற பெயரில் பெண்களுக்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தினார்.  சென்னையை சேர்ந்த 'லட்சுமி சுவாமிநாதன்' அவர்கள் தலைமையில் பெண்கள் படையில் 1500 இந்திய வெளிநாட்டுப்பெண்கள் பங்கேற்று பணியாற்றினர்.

       இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர
கி.பி.1945 ஆம் ஆண்டு  ஜப்பானை சரணடைய கேட்டுக்கொண்டனர்.ஆனால் ஜப்பான் மறுத்துவிடவே அமெரிக்கா ஐப்பானிலுள்ள ''நாகசாகி மற்றும் ஹிரோஷிமா'' நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது.இதனால் அதிர்ந்து போன ஜப்பான் ஆகஸ்டு 15 ந் தேதி சரணடைவதாக அறிவித்தது.இதனால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

              அணுகுண்டு வீச்சின் பாதிப்பு மிக மோசமாக இருந்ததை பார்த்த உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன.உலக நாடுகளின் பிரச்சினைகளை பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும்.என்றும் இனியும் உலக போர் ஏற்படுவதை ஆதரிக்கக்கூடாது என்றும் முடிவு எடுத்தனர்.அதன் விளைவாக  உலக நாடுகளின் அமைதி காக்க பன்னாட்டு சபை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
         
           கி.பி.1945ஆம் ஆண்டு அக்டோபர் 24 ந்தேதி உலக நாடுகள் சங்கத்தை மாதிரியாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை UNITED NATIONS ORGANISATION ஏற்படுத்தப்பட்டது.இதன் நோக்கம் உலகில் அமைதியை ஏற்படுத்துவது ஆகும்.இப்போது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
      
            இவ்வாறான பல பிரச்சினைகளை சந்தித்த பிரிட்டிஷ் அரசு நமக்கு 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ந் தேதி சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறியது.

          சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் புதிய மந்திரிசபை அமைக்கப்பட்டது.துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் பொறுப்பு ஏற்றார்.
        உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சிதறிக்கிடந்த 568 சமஸ்தானங்களையும் சந்தித்து பேசி தம் திறமையான அனுபவ வாதத்தால் நமது மாகாணத்துடன் ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்தி ஒரே இந்தியாவாக்கினார்.
              இவ்வாறு கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தை எந்தவொரு தனி மனிதன் அதிகாரத்தில் சிக்கி மீண்டும் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்த மந்திரிசபை மக்களுடைய ஆட்சியை மக்களே ஆளும் அதிகாரம் பெற வேண்டும்.அதற்கான இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதிய மந்திரிசபை டாக்டர் அம்பேத்கார் அவர்களிடம் ஒப்படைத்தது.

               டாக்டர் அம்பேத்கார் தலைமையில் 11 சட்டமேதைகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல நாடுகளின் சட்டங்களை ஆய்வு செய்து நமது நாட்டிற்கேற்றவாறு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியது.

            கி.பி.1949ஆம் ஆண்டு  நவம்பர் 26ந் தேதி கூடிய நேரு மந்திரிசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நேரு அவர்கள், 

சுதந்திரம் பெறுவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்னரே  காந்தியடிகள் அறிவித்த சுதந்திர தினமான ஜனவரி 26 ந் தேதியன்று  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தி குடிமக்கள் ஆட்சி செய்யும் உரிமை பெற்ற நாளாக , குடியரசு நாளாக அறிவிப்போம்என்று யோசனை தெரிவித்தார்.அதன் விளைவாக
   
    கி.பி. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதியன்று மக்கள் முழு அதிகாரம் பெற்ற நாளாக அறிவித்தனர்.

  எனவே மாணவக்குழந்தைகளே,
        உணவின் அருமை பசியோடு வாடுபவருக்கத்தான் தெரியும்,
உயிரின் அருமை விபத்தில் சிக்குண்டு சீரழிபவர்களுக்கே தெரியும்,உறவின் அருமை பிரிந்து இருப்பவர்களுக்கே தெரியும்,
சுதந்திரத்தின் அருமை அடிமைப்பட்டுக்கிடந்தவர்களுக்குத்தான் தெரியும்,
 எனவே 

                நமது சுதந்திரத்துக்காக தன் சுகத்தை இழந்து,பெற்றோரை பிரிந்து,மனைவி மக்களை பிரிந்து,பல கொடுமைகளுக்கு ஆளாகி தன்னுயிரையே கொடுத்து பாடுபட்டு சுதந்திரம் பெற்று கொடுத்த விடுதலை வீரர்களை நினைத்து போற்றி வணங்குவோம்.

                   இன்று நமது பாதுகாப்புக்காக எல்லைப்பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் கொட்டும் மழையில்,பனியில்,குளிரில் வசதி குறைவான நிலையில் தம் குடும்பத்தை பிரிந்து தன்னையே வருத்தி தன்னுயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில்  காவல் இருக்கும் ராணுவத்தினரையும்,துணை ராணுவத்தினரையும் போற்றி வணங்குவோம்.அவர்களைப் பிரிந்து வாடும் ராணுவத்தினரின் குடும்பத்தாரையும் வணங்கி போற்றுவோம்.

   நமது இந்திய விடுதலைக்காக போராடிய பிரிட்டிஷ் உள்ளிட்ட வெளிநாடு சார்ந்த அன்னிபெசன்ட் அம்மையார்,ஆலன் ஆக்டேவியன் ஹியூம் போன்ற மூன்றாம் பிரிவு சான்றோர்களையும் நினைவில் நிறுத்தி வணங்குவோம்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக
                                   எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டிலிருந்து 142 வீரர்கள் விடுதலைக்காக போராடி தங்களையே தியாகம் செய்து உள்ளார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

            என்று கூறி வாய்ப்பளித்த KCTமெட்ரிக் பள்ளி நிர்வாகத்திற்கும்,பொறுமை காத்து கவனமாக கேட்ட பெற்றோர் மேன்மக்களுக்கும்,இருபால் ஆசிரியப்பெருமக்களுக்கும்,இருபால் மாணவக் குழந்தைகளுக்கும் நான் சார்ந்துள்ள நுகர்வோர பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு என்னும் அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக நன்றி கூறி விடை பெறுகிறேன்.