Sunday 21 April 2013

மருந்தின் மரணம்

அன்பார்ந்த நண்பர்களே,வணக்கம்.
     

             நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

   உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.நோயின் தன்மைக்கேற்ப தகுந்த மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று அதன்படி நடப்பதுதான் சிறந்த மற்றும் பாதுகாப்பான முறை ஆகும். ஆனால் நாம் மருந்துக் கடைக்கு சென்று நமது நோயின் தன்மை அல்லது வலியின் வீரியத்தை மருந்துக்கடை ஊழியரிடம் கூறி தன் விருப்பம்போல ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிட்டு நோயைத் தணிக்கிறோம்.
    அதற்கு முன்பாக சில ஆலோசனைகள் உங்களுக்காக;-
               நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.ஆனால் இறப்பு தேதி எப்போது எனத் தெரியாது!?!. ஆனால் மருந்துகளுக்கோ அவை பிறக்கும்போதே அதாவது தயாரிக்கும்போதே அவைகளின் மரணத் தேதியும் தீர்மானிக்கப்படுகிறது.
         மருந்தின் வீரியம் என்பது அதன் வாழ்நாளையும்,அது எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே! என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
            சில மருந்துகள் கனிம வேதிப்பொருட்களால் ஆனவை.எனவே அவை நெடுங்காலம் சிதையாமல் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலான மருந்துகள் கரிம  வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.கரிம வேதிப்பொருட்களால் ஆன மருந்துகள் வெப்பம்,உப்புத்தன்மை,ஈரத்தன்மை,போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிதைவுறும் வாய்ப்புகள் அதிகம்.அதோடு ஒளி,உலோக அழுக்குகள்,ஆக்ஸிஜன்,ஆக்ஸிகரணிகள் போன்றவை எளிதில் சிதைத்து அதிக பாதிப்புக்கு ஆளாகுகின்றன.அதுமட்டுமல்ல,மருந்துகள் சிதைய மிக மிகச் சிறிய ஆக்ஸிஜன் அல்லது உலோக அயனி கூட போதுமானது.
                        எனவே,மருந்தை தயாரிக்கும்போதே அதன் வீரியம்,தரம் மற்றும் தூய்மையை நிர்ணயித்து மருந்தின் வாழ்நாள் அல்லது காலாவதியாகும் தேதியை முன்கூட்டியே தீர்மானம் செய்து,அதனை மருந்தின் மேலுறையில் குறிப்பிட வேண்டியது அவசியம்.
                   மருந்தின் மேலுறையில் குறிக்கப்படும் மருந்தின் ஆயுட்காலம் என்பது அலமாரிக்குள் பாதுகாப்பாக,திறக்காத கொள்கலத்தில் மருந்து உள்ள காலம் அதாவது மருந்துக்கடையில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள காலத்தையே குறிக்கிறது. நுகர்வோர் வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு அல்ல.
          பொதுவாக மருந்துகள் கெடாமல் இருக்க ஒளி புகாத பெட்டிக்குள் அடைக்கப்பட வேண்டும்.எனவேதான் வெப்பத்தால் சிதைவுறும் மருந்துகள் கரும்பழுப்பு நிறப் பாட்டில்களில் அடைக்கப்படுகின்றன.நம் வெப்பமண்டல சீதோஷ்ண நிலை மருந்துகளை எளிதில் சிதைவுறச் செய்கிறது. எனவே குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்க வேண்டும்.அடிக்கடி மூடித் திறந்தால் குறிப்பிட்ட ஆயுளைவிடக் குறைந்த காலத்திலேயே கெட்டுவிடும்.
      கண் மற்றும் காது சொட்டு மருந்துகள் 10மி.லி.பாட்டில்களில் இருக்கும். அவற்றை மூடியைத் திறந்த 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கைக் குறிப்பும் அதில் குறிப்பிட்டு இருக்கும். எனவே மூடியைத் திறந்த முப்பது நாட்களுக்குள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர்  அதனைப் பத்திரப்படுத்தி ஆறுமாத காலத்திற்கு பயன்படுத்துகிறோம்.அதனை நமது சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் கொடுக்கிறோம்.
    பாராசிட்டாமால் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து.இந்தியாவில் கிட்டத்தட்ட பதினெட்டு கம்பெனி பெயர்களில்விற்பனைக்கு வருகிறது பாராசிட்டாமால் மருந்து. பாராசிட்டாமால் உட்கொண்ட பிறகு வயிற்றுப்பிரச்சினையையோ,அல்சர் எனப்படும் குடல் புண்களையோ உண்டாக்குவதில்லை.மாறாக நேரடியாக மைய நரம்பு மண்டலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.மைய நரம்பு மண்டலம் என்பது மூளையும் முதுகுத் தண்டுவடமும் ஆகும்.நரம்பு மண்டலத்தின் விரிவாக்கம் பின்னர் பதிவிடப்படும்.
   நன்றிங்க! 
        தகவல்-
           திருமிகு. பேரா.மோகனா அம்மையார் அவர்கள் - 
                                     தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
                                                                    பழனி.

No comments:

Post a Comment