மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இந்தப்பதிவில் நுகர்வோருக்கான நீதி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
நுகர்வோர் நீதி-ஒரு கண்ணோட்டம்
ச. ஞானதேசிகன்
மார்ச் 15, உலக நுகர்வோர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் நாளில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு நீதி வழங்கும்
நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
“நுகர்வோரே அரசர்” என்ற நிலை இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழலில்
நிலவினாலும் அது பெயரளவிற்கே பொருந்துகிறது. நிஜவாழ்க்கையில்,
தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களினால்
ஏமாற்றப்படும் அவல நிலையில்தான் நுகர்வோர்கள் உள்ளனர்.
பணம் செலுத்தி சொந்த உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் அல்லது
பயன்பெறும் சேவையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றங்களை
அணுகலாம்.
இன்றைய நுகர்வோர்கள், பொருளின் தரம், எடைகுறைவு, அதிக விலை, விளம்பரம்,
போலிப் பொருள்கள், ஏகபோக வணிகத்தின் மூலம் ஏமாற்றப்படும் சூழ்நிலை
நிலவுகிறது. உத்தேச மதிப்பீட்டின்படி இந்திய நுகர்வோர்கள் ஆண்டுதோறும் ரூ. 2
ஆயிரம் கோடி மதிப்பில் ஏமாற்றப்படுகின்றனர்.
நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வில் நமது நாட்டினர் பின்தங்கிய
நிலையில் உள்ளனர். எழுத்தறிவின்மை, ஏழ்மை, வாங்கும் சக்தி குறைவு,
அலட்சியம், அக்கறையின்மை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.
நுகர்வோர் உரிமைகள்: 1962, மார்ச் 15ம் நாள் மறைந்த அமெரிக்க அதிபர்
ஜான் எஃப் கென்னடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் யாதெனில்
பாதுகாப்புரிமை, தெரிவு செய்யும் உரிமை, தகவல் பெறும் உரிமை மற்றும்
குறைகளைத் தெரிவிக்கும் உரிமை.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் செயல்படும் பன்னாட்டு நுகர்வோர்
அமைப்பு மேலும் மூன்று உரிமைகளை வலியுறுத்தியுள்ளது. அவைகள் இழப்பீடு
பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986: நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு
நுகர்வோர் சம்பந்தப்பட்ட பல சட்டங்களை மத்திய, மாநில அரசுகள்
இயற்றியபோதிலும், நுகர்வோருக்குக்கென்று அவர்களது உரிமைகளைப்
பாதுகாக்கவும், நலன் பேணவும் 1986-ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு
வரப்பட்டது. இச் சட்டம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து பிற
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இச்
சட்டம் அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை
அமைப்புகளுக்குப் பொருந்தும். இலவசப் பொருள்கள் மற்றும் இலவச சேவைகள் இச்
சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் கலாசாரம் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் நுகர்வோரின்
குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை
தீர்ப்பாணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.
நுகர்வோர் நீதிமன்றங்கள்: இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
1986-ன்படி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதி வழங்க மூன்றடுக்கு கொண்ட குறை
தீர்க்கும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் நிலையில் மாவட்ட
நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில்
செயல்படுகிறது. ரூ. 25 லட்சத்திற்குக் குறைவாக நஷ்ட ஈடு கோரும் நுகர்வோர்
இம் மன்றத்தை அணுகலாம்.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்
ஆண்டறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 570 மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும்
மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சம் நுகர்வோர் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டதில் 2 லட்சம் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர
பெரும்பான்மையான நுகர்வோர் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம்
88 சதவீதம்.
சிக்கிம் மாநிலத்தில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும்
மன்றங்கள், நுகர்வோர் குறை தீர்ப்பதில் நாட்டிலே முதலிடம் வகிக்கின்றன.
தீர்வு விகிதம் 98 சதவீதம். நுகர்வோர் நீதி பெறுவதில் பிகார் மாநில
மக்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். தீர்வு
விகிதம் 76 சதவீதம்.
ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்கும் குறைவாக இழப்பீடு கோரும்
நுகர்வோர், மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தை அணுகலாம். நாட்டில்
தற்போது 34 மாநில நுகர்வோர் நீதிமன்றங்கள் மாநிலத் தலைநகரங்களில் இயங்கி
வருகின்றன. இவ்வாணையங்களில் 3,59,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில்
2,41,231 வழக்குகளில் நுகர்வோருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மாநில
நுகர்வோர் தீர்ப்பாணையத்தின் தீர்ப்பு 67 சதவீதம்.
நுகர்வோருக்கு நீதி வழங்குவதில் நாட்டிலே சண்டீகர் மாநில நுகர்வோர் குறை
தீர்ப்பாணையம் முதலிடம் வகிக்கிறது. தீர்ப்பு விகிதம் 97 சதவீதம்.
அதேவேளையில் மிகக்குறைந்த அளவில் உத்தரப் பிரதேச மாநில நுகர்வோர் குறை
தீர்ப்பாணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் புதுதில்லியில் செயல்பட்டு
வருகிறது. பாதிக்கப்பட்ட நுகர்வோர், ரூ.1 கோடிக்கு மேல் இழப்பீடு கோரினால்
தேசிய ஆணையத்தை அணுகலாம். சுமார் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டதில், 27 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம்
தேசிய அளவில் 78 சதவீதம்.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் அவர் சார்ந்த மாவட்ட, மாநில நுகர்வோர்
தீர்ப்பாணையங்களை அணுகி இழப்பீடு கோரலாம். நுகர்வோர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர ஒரு ரூபாய் கூட நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்த
வேண்டியதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு 90 முதல் 150
நாள்களுக்குள் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில்
பாதிக்கப்பட்ட நுகர்வோர் நீதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. தாமதமாக
வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். தாமதமாக நுகர்வோர் நீதி
வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் நிலவுகின்றன.
முதலாவதாக, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் “”வாய்தா” கேட்பதின் மூலம்
நுகர்வோர் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. நுகர்வோர் மற்றும்
விற்பனையாளர்களின் அலட்சியப்போக்கு, அக்கறையின்மை இதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்
செயல்படுகின்றன. பெரும்பாலான நுகர்வோர் தீர்ப்பாணையங்கள் சொந்தக்
கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல!
மேலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்
பதவிகள் நிரப்பப்படாததால் நுகர்வோர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள
வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும்
ஆணையை நிறைவேற்றாமல் செயல்படும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணமாக
நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய நீதி மேலும் தாமதமாகிறது.
மேற்கூறிய குறைகளைத் தவிர்க்க கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நுகர்வோர் நலனைப் பேணலாம்.
வழக்கறிஞர்கள் அதிக அளவில் “வாய்தா’ வாங்குவதைத் தவிர்க்க வழிவகை
செய்யவேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து, முன்கூட்டியே
நியமிப்பதன் மூலம் வழக்குகள் தொய்வில்லாமல் நீதி வழங்க வகை செய்ய வேண்டும்.
நுகர்வோர் நீதிமன்ற உள்கட்டமைப்பு வசதிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள்
தாராள நிதி வழங்க வேண்டும். நிதி வழங்குவதிலும், நீதி வழங்குவதிலும்
காலதாமதம் கூடாது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை
விற்பனையாளர்கள், சேவை நிறுவனங்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமுறைப்படி கிடைக்கிறதா என்பதை அரசு
அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
நுகர்வோர் தாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சேவையில் உள்ள
குறைகளைத் தீர்க்க நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதுபோல், நுகர்வோர்
நீதிமன்றத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் தார்மிகக்
கடமையாகும்.
“”நலம் சார்ந்த அரசு” நுகர்வோர் நலன் பேணட்டும் என்று இன்றைய தினத்தில் சூளுரைப்போம்.
(கட்டுரையாளர்: வணிகவியல்துறைத் தலைவர், டாக்டர் என்.ஜீ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்).